Publish Date: Tue, 04 Mar 2008 (11:16 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (11:14 IST)
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடலியல் உள்ளிட்ட சில ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காகத் தமிழக அரசிடம் 250 ஏக்கர் நிலம் கோரியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூர்புரம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் கடல்சார் காட்சிக் கூடத்தை திங்கள்கிழமை துவக்கிவைத்த மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல் இத்தகவலைக் கூறினார்.
தேசியக் கடல்சார் தொழில்நுட்பக் கழகம் தற்போது மேற்கொண்டுவரும் கடல்சார்ந்த ஆய்வுகள் கடற்கரையை ஒட்டி அமையவில்லை என்பது குறையாக உள்ளது. எனவே, கடலோரப் பகுதியில் நிலம் கிடைத்தால் கடல்சார்ந்த ஆய்வுகளை விரிவாக மேற்கொள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் கோட்டூர்புரம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தை மேம்படுத்த நிதி கோரப்பட்டது. இது அருங்காட்சியகம் என்றால் அது பண்பாட்டுத் துறையின் கீழ்தான் வரும் என்று அரசு சார்பில் கூறப்பட்டது. இருந்தாலும், இத்தகைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்ற கபில்சிபல், இந்தக் கடல்சார் காட்சிக் கூடத்தின் செலவில் 70 சதவீதத்தை மத்திய அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்ட கடல்சார் அறிவியல் காட்சிக் கூடத்தில் கடல்களின் இயக்கம், அவற்றில் உள்ள அரிய வளங்கள், கடல்களால் ஏற்படும் வானிலை மாற்றங்கள், நில அடுக்குத் தட்டுகளின் நகர்வினால் ஏற்படும் சுனாமி போன்ற நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.