Publish Date: Mon, 03 Mar 2008 (16:14 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:46 IST)
தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்காததை கண்டித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் உட்பட நான்கு பேர் இன்று பதவியிலிருந்து விலகினர்.
இன்று மக்களவையில் கேள்வி நேரம் துவங்குவதற்கு முன்னரே, கே. சந்திரசேகர், பி.வினோத் குமார், தர்வாத் ரவீந்தர் நாயக், மதுசூதன் ரெட்டி ஆகிய நான்கு பேரும் மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜியிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுத்தனர்.
இது குறித்து சோமநாத் சாட்டர்ஜி கூறுகையில், பதவி விலகல் கடிதம் முறைப்படி இருக்கின்றதா என்பதை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக மக்களவையில் சந்திரசேகர் பேசுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைக்கும் போது, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதன் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தெலுங்கானா பகுதி மக்களை ஏமாற்றிவிட்டது.
இதை எதிர்த்து நாங்கள் எங்கள் உறுப்பினர்களை பதவி விலகச் செய்கின்றோம் என்று கூறினார். பிறகு அவரும், மற்ற மூன்று பேரும் மக்களைவத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இந்த பிரச்சனை பற்றி எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி பேசுகையில், மக்களவை உறுப்பினர்கள், தங்கள் பதவி விலகல் கடிதத்தை அவையில் சமர்ப்பிப்பது முதன் முறை என்பதை சுட்டிக் காட்டியதுடன், குடியரசுத் தலலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலும், தெலுங்கானா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
அத்வானி பேசும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உத்தரகாண்ட், சத்தீஷ்கர், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் அமைக்கப்பட்டது என்று கூறியபோது, சபையில் அமளி ஏற்பட்டது.
தங்கள் தலைவரை தெலுங்கானா பிரச்சனை பற்றி பேசவிடவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே திரும்பி வந்து சபை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டது என நேற்று புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடந்த போராட்டத்தின் முடிவில், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவர் கே. சந்திரசேகர் குற்றம் சாட்டினார். மக்களவையில் இருந்து நாளை பதவி விலகப் போவதாக அறிவித்தார்.
இதே போல் மாநில சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.களும் பதவி விலகுவார்கள் எனறும் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 03 Mar 2008 (16:14 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:46 IST)