Publish Date: Fri, 29 Feb 2008 (15:09 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (15:08 IST)
மத்திய அரசுக்கு சொந்தமான, பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இவைகளின் பங்கு 8.23 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டில்(2005-06) 8.21 விழுக்காடாக இருந்தது.
இந்த நிறுவனங்களின் நிகர இலாபம் 2006-07 நிதி ஆண்டில் ரூ.69,536 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டைவிட 17.28 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் முதலீடு மற்றும் நீண்ட கால கடன்கள் 2007 மார்ச் இறுதி நிலவரப்படி ரூ.4,21,089 கோடியாக இருக்கின்றது. இது முந்தைய ஆண்டை விட 4.31 விழுக்காடு அதிகம்.
இந்த நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் ரூ.9,64,410 கோடி. இது முந்தைய ஆண்டை விட 15.18 விழுக்காடு அதிகம்.
அரசுக்கு சொந்தமான மற்றம் பொதுத்துறை நிறுவனங்களில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 55 விழுக்காடு நிறுவனங்களில், அதன் உற்பத்தி திறனில் 75 விழுக்காடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
17 விழுக்காடு நிறுவனங்களில் 50 முதல் 75 விழுக்காடு திறன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
28 விழுக்காடு நிறுவனங்களில் உற்பத்தி திறனில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 156 நிறுவனங்கள் இலாபம் சம்பாதித்து உள்ளன. 59 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
(முந்தைய ஆண்டு 160 லாபத்தில் இயங்கின.63 நஷ்டத்தில் இயங்கின).
இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு 2006-07 நிதி ஆண்டு கணக்குப்படி ரூ.4.52,995 கோடியாக இருக்கின்றது.
(முந்தைய ஆண்டு ரூ.3,97,275 கோடி).
இந்த நிறுவனங்கள் வாயிலாக மத்தி அரசுக்கு பங்கு ஈவுத்தொகை,வட்டி,வரி போன்ற இனங்கள் மூலம் ரூ.1,47,728 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
(முந்தைய ஆண்டு ரூ.1,25,455 கோடி).
இந்த நிறுவனங்கள் பங்கு ஈவுத்தொகையாக மட்டும் ரூ.26,805 கோடி வழங்கியுள்ளன. இது சென்ற ஆண்டை விர 17.12 விழுக்காடு அதிகம்.
(முந்தைய ஆண்டு ரூ.22,886 கோடி).
இந்த தகவல் நேற்று நாடளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.