நாட்டில் புதிய விமான நிலையங்களை அமைப்பதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்தாண்டு மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு கொள்கையை அறிவிக்க உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை ஈர்க்கத்தக்க வகையில் தெளிவான நெறிமுறைகளை வகுக்கும் பணியில் தற்போது மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்து உள்ளார்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்து இருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்த உடன் ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பான அரசின் கொள்கை அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது மூடப்பட்டு கிடக்கும் விமான நிலையங்களை கூட்டு முயற்சியுடன் மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக தனியாரின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மூடப்பட்டுள்ள விமான நிலையங்களில் இருந்து ஒரு பட்டியலைத் தயார் செய்துள்ளதாகவும் பிரபுல் பட்டேல் தெரிவித்து உள்ளார்.
இந்தக் கொள்கை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான உள்கட்டமைப்பு குழுவால் உருவாக்கப்பட்டது. இதில் திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டில் விமான நிலையங்களை அமைக்க உதவும் முதலீடுகளுக்கு அனுமதி வழங்க இந்தக் கொள்கையில் எளிதான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பசுமைதள விமான நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கவும் இந்த புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றும், இவை உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.