Publish Date: Wed, 27 Feb 2008 (19:10 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (19:09 IST)
உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடித்துவிட முடியும் என்று மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
மக்களவையில் இன்று சேதுக் கால்வாய் திட்டம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "இத்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதனடிப்படையில், சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான ஆலோசனைகள், எதிர்க் கருத்துகள் போன்றவற்றை அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் பெற்று ஆலோசிக்கும் நோக்கத்துடன் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வல்லுநர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் அனுமதி அளித்தது. இருந்தாலும், கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளைத் தொடர்ந்து ஆதம் பாலம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்" என்றார்.
முன்னதாக, அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு புதிதாக தயாரித்து இருக்கும் பதில் மனு, மத சார்பற்றதாகவும், அதே சமயம் தற்போது பாக். ஜலசந்தி பகுதியில் நடைபெற்று வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.