Publish Date: Wed, 27 Feb 2008 (17:21 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (17:20 IST)
இந்திய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியாவிடம் சீன அரசு கோரியதை மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள புத்த மதத்துக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீன அரசு இந்தியாவிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனாவுக்கு தெளிவாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டதாகவும், இந்திய - சீன எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சு நடத்த புதிதாக எந்த கூட்டு நடவடிக்கைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.