இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்ததற்குப் பதிலடி கொடுத்துள்ள இடதுசாரிகள், அரசா - ஒப்பந்தமா என்பதை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் தேர்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் எச்சரித்துள்ளனர்.
நிதிநிலை அறிக்கை தொடரின் துவக்க நாளான இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதீபா பாட்டீல், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
இது குறித்து, டெல்லியில் இன்று துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. பாந்தேவிடம் கேட்டதற்கு, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அளித்துள்ள உறுதிமொழியை மீறினால் மத்திய அரசு பாதிப்பைச் சந்திக்கும் என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜாவும் இதே கருத்தைப் பிரதிபலித்ததுடன், ஒப்பந்தத்திற்கு எதிரான நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இனி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய பிரதீபா பாட்டீலின் கருத்து, நாடாளுமன்றத்தின் விருப்பத்திற்கு மாறானது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.