Publish Date: Mon, 25 Feb 2008 (12:36 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (12:35 IST)
மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தில் சேர அனைத்து ஊழியர்களுக்கும் வாய்ப்பு அளித்தல், பணிக் காலத்தில் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், வங்கி பணிகளை தனியாருக்கு விடக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி இன்றும் (திங்கள்), நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் முயற்சியாக மத்திய தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் முகோபாத்யாயா கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்றும், நாளையும் ஆகிய இரு நாட்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் கைவிட்டுள்ளனர். இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலர் வெங்கடாசலம், மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவித்துள்ளார்.