Publish Date: Fri, 22 Feb 2008 (18:43 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (18:43 IST)
மராட்டியத்தில் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 4 நக்சலைட்டுகளும், 1 காவலரும் பலியாயினர்.
மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் சத்தீஷ்கர் மாநில எல்லையோரத்தில் நக்சலைட்டுகள் அதிகளவில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, நக்சலைட்டுகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டதில் 4 நக்சலைட்டுகளும், 1 காவலரும் பலியாயினர்.
இது குறித்துக் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மோதல் நடந்த இடத்தில் இருந்து 4 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அவர்கள் அனைவரும் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.