Publish Date: Fri, 22 Feb 2008 (13:21 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (13:20 IST)
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பை கண்காணித்து அத்துமீறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
மத்திய அரசு 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆணையின்படி 1995-ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வார்க்குகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்துவதற்காக மாவட்ட, மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த குழுக்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
மாவட்ட அளவிலான குழுவின் பணி!
கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்த குற்றச்சாட்டை பொது மக்கள் தெரிவிக்கவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது
கேபிள் டிவி நெட்வார்க் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையை ஆய்வு செய்வது
பொது ஒழுங்கை பாதிக்கும் நிகழ்ச்சி அல்லது சமுதாயத்தின் அதிருப்தியை மத்திய மாநில அரசுகளின் கவனதிற்கு உடனடியாக கொண்டு வருவது
உள்ளூர் அளவில் கேபிள் டிவிக்களின் நிகழ்ச்சிகளை கண்காணிப்பது. அனுமதி பெறாத நிறுவனங்கள் செயல்படுவதை அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மூலம் தடுப்பது, உள்ளூர் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மட்டுமே உள்ளூர் செய்தியாக கேபிள் டிவி ஒளிபரப்ப வேண்டும் என்பதையும் உள்ளூர் செய்தியும் விருப்பு வெறுப்பின்றி எந்தவொரு சமுதாயத்தையும் அதிருப்திக்குள்ளாக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் கண்காணிப்பது
கேபிள் டிவி நெட்வார்க் மூலம் இலவசமாக ஒளிபரப்ப வேண்டிய சேனல்கள் ஒளிபரப்பபடுகின்றனவா என்பதை கண்காணிப்பது
பரிந்துரை செய்யப்படும் முறை!
மாவட்ட அளவில் அதிகாரி ஒருவர் தலைமையிலான புகார் பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டும். கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது குறித்து விரிவாக விளம்பரம் செய்யப்பட வேண்டும். இந்தக் குழு குறித்தும் அது கடைப்பிடிக்கும் நடைமுறை குறித்தும் மாநில அரசின் இணையதளத்தின் மூலம் தகவல் வெளியிடப்பட வேண்டும்.
உள்ளூர் கேபிள் டிவி நிகழ்ச்சி குறித்த புகார் தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை குழு கேட்டு பெற்று நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதை குழுவே முடிவு செய்யலாம். நெறிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதிகாரம் பெற்ற அதிகாரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
தேசிய/பிராந்திய சேனல்கள் குறித்த புகார்களை மாவட்டக் குழு மாநில அளவிலான குழு மூலம் மத்திய அரசுக்கு தனது பரிந்துரைகளுடன் அனுப்பலாம்.
கட்டாயமாக ஒளிபரப்பு செய்ய வேண்டிய சேனல்களை கேபிள் ஆப்ரேட்டர் தரவில்லை என்றாலும் அல்லது இந்த சேனல்களின் நிகழ்ச்சிகள் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அதிகாரம் பெற்ற அதிகாரி மூலமாக மாவட்டக் குழு நடவடிக்கை எடுக்கலாம். கட்டாய சேனல்களை தெளிவாக ஒளிபரப்பு செய்யுமாறு உத்தரவிடவோ அல்லது கேபிள் டிவி சட்டத்தின்படி வேறு எந்த நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரம் பெற்ற அதிகாரியால் முடியும்.
மாநில அளவிலான கண்காணிப்புக் குழு!
கேபிள் டிவி நெட்வார்க் குறித்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மாநில அளவிலான குழு அமைப்பது குறித்து தனியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மாநில அளவிலான குழு அமைப்பது இப்போது அறிவிக்கப்படுகிறது.
1. மாநில அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயலர் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவர்
2. மாநில காவல் துறையின் தலைமை இயக்குனரின் பிரதிநிதி, மாநில சமூக நலத்துறையின் செயலர், மாநில மகளிர் மற்றும் குழந்தை நல மேம்பாட்டுத் துறையின் செயலர், மாநிலத்தில் பெண்களின் நலனுக்காக பணியாற்றி வரும் முன்னணி அரசு சாரா அமைப்பின் பிரதிநிதி, கல்வியாளர்கள் அல்லது சமூகவியலாளர்கள் அல்லது மனநல மருத்துவர்கள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள்
3. மாநில அரசின் செய்தித் துறை இயக்குனர் இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார்
குழுவின் செயல்பாடுகள்!
மாவட்ட/உள்ளூர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை கண்காணிப்பது மற்றும் இக்குழுக்களின் கூட்டங்கள் சரிவர நடைபெறுவதை கண்காணிப்பது
அதிகாரம் பெற்ற அதிகாரிகள் தங்கள் பணியை செம்மையாக செய்கின்றனவோ என்பதை கண்காணிப்பது
மாவட்ட உள்ளூர் அளவிலான குழுக்களுக்கு யோசனைகளை வழங்குவது
மாவட்ட உள்ளூர் அளவிலான குழுக்கள் அனுப்பும் பிரச்னைகள் மீது முடிவெடுப்பது
நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கான மத்திய அரசின் நெறிமுறைகளை மீறும் தேசிய சாட்லைட் சேனல்கள் குறித்து மாநில அரசின் தலைமைச் செயலர் மூலமாக புகார்கள் தெரிவிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிந்துரைப்பது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Fri, 22 Feb 2008 (13:21 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (13:20 IST)