Publish Date: Thu, 21 Feb 2008 (13:23 IST)
Updated Date: Thu, 21 Feb 2008 (12:55 IST)
நமது நாட்டின் முதல் ஆளில்லா இலகு ரகப் போர் விமானமான "லக்ஷயா", நவீனப்படுத்தப்பட்ட பிறகு ஒரிசாவின் சண்டிப்பூர் பகுதியில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
நமது விஞ்ஞானிகளால் 1985-ல் தயாரிக்கப்பட்ட "லக்ஷயா', பல்வேறு சோதனைகளுக்குப் பின் 2000-ஆவது ஆண்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த போர் விமானத்தில் தற்போது என்ஜினின் திறன் அதிகரிக்கப்பட்டது, வானில் பறக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீனமயமாக்கப்பட்ட லக்ஷயாவின் சோதனை சண்டிப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆறு அடி நீளமுடைய லக்ஷயா விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் 35 நிமிடங்கள் வரை பறக்கும் திறனுடையது. தரைக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி எதிரி நாடுகளின் மீது குண்டுமழை பொழிந்து விட்டு, போன சுவடே தெரியாமல் திரும்பி வந்து விடும் ஆற்றல்மிக்கது.
பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் இந்த ரக விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு விமானத்தை வடிவமைக்க ரூ.293 கோடியே 75 லட்சம் செலவாகிறது. லக்ஷயா விமானத்தை வாங்க இஸ்ரேல், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.
தற்போது விமானப்படையில் அங்கம் வகிக்கும் லக்ஷயாவை அடுத்தடுத்து கடற்படை, தரைப்படையிலும் சேர்க்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 21 Feb 2008 (13:23 IST)
Updated Date: Thu, 21 Feb 2008 (12:55 IST)