Publish Date: Tue, 19 Feb 2008 (20:51 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (20:46 IST)
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதத்தை சுட்டிக்காட்டி ஊடகங்களில் எழுதப்படுவது நல்லுணர்வைக் கொண்டது அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்திலும், வெளியிலும் போராடிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரான டீஸ்டா செதல்வாட் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் பிணைய விடுதலை கோரி தொடரப்பட்ட மேல் முறையீடுகளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, டீஸ்டா செதல்வாட் எழுதிய அந்தக் கட்டுரை அவமானகரமானது என்று கருதுவதாகக் கூறியது.
"யார் இந்த டீஸ்டா செதல்வாட். இங்கு பிணைய விடுதலை கோரி மனு செய்தவர்களின் பேச்சாளரா? அப்படியானால், அவருடைய கருத்தை நாங்கள் கேட்கத் தயாராக இல்லை? இப்படியெல்லாம் எழுதுவது அவமானகரமானது, அது எழுதப்பட்ட விதம் நல்லுணர்வைக் கொண்டதாக இல்லை" என்று நீதிமன்றக் குழு வருத்தத்துடன் கூறியுள்ளது.
கால அவகாசம் கோரி தள்ளிவைப்பதற்கு ஏற்ற வகையில் விசாரணை நடைபெற்று வருவதாக டீஸ்டா செதல்வாட் கூறியிருப்பது கவலைப்படத்தக்க குற்றச்சாற்று என்று கூறிய தலைமை நீதிபதி, அவர் எழுதிய கட்டுரை மலையாள நாளிதழ் ஒன்றிலும் வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட கட்டுரைகள் அவமானகரமானவை என்று கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 19 Feb 2008 (20:51 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (20:46 IST)