Publish Date: Mon, 18 Feb 2008 (14:48 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
இந்தியாவில் இன்னும் பத்தாண்டுகளில் தொலைபேசி மூலம் கட்டணமின்றி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இராசா கூறினார்.
சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் உயர்திறன் கொண்ட தொலைத் தொடர்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இராசா இவ்வாறு கூறினார்.
கட்டணமின்றி பேசும் நிலை உருவானாலும் தகவல்கள் பரிமாற்றத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்று கூறிய அவர், இந்தியாவில் உள்ள தொலைபேசி கட்டண விகிதங்களை மற்ற நாடுகளில் உள்ள கட்டண விகிதங்களுக்கு ஒப்பிட முடியாது என்றார். மற்ற நாடுகளில் உள்ள சம்பள விகிதங்களை போன்று இந்தியாவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்பதற்கு தயாராக இல்லை என்று குறிப்பிட்ட இராசா, தொலைத் தொடர்புக்கான அலைவரிசை மதிப்புமிக்கது என்றதுடன், நாட்டில் ஒருசில தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் செயல்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும், "தொலைத் தொடர்புத் துறையில் போட்டியை ஏற்படுத்தவும் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கொண்டு வரவும் மேலும் ஆறு அல்லது ஏழு நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத் துறையில் சேவை அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சேவையை துவக்குவதற்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகளாகும். அதன்பிறகு தொலைபேசி கட்டணங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது" என்று கூறிய அமைச்சர், தொலைத் தொடர்பு வட்டத்திற்குள் செய்யப்படும் அழைப்புக்கு 10 பைசாவாகவும் மற்ற வட்டங்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு 20 பைசாவாகவும் வருங்காலத்தில் கட்டணங்கள் இருக்கலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 18 Feb 2008 (14:48 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)