Publish Date: Sun, 17 Feb 2008 (16:48 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
ஒரிஸாவில் காவல்துறையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் நடந்த மோதலில் பத்து நக்சலைட்டுகளும் மூன்று காவல்துறையினரும் பலியாயினர்.
ஒரிஸா மாநிலம் நயகாரில் நக்சலைட்டுகள், காவல்துறையினரின் ஆயுத கிடங்கு, பயிற்சி பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 14 காவலர்கள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த ஏராளமான ஆயுதங்களை நக்சலைட்டுகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக மத்திய ரிசர்வ் படையினர் உள்பட ஆயிரக்கணக்கான காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நயாகார்- சாந்தமால் எல்லை அருகே திகாபலி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், நக்சல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் நக்சலைட்டுகள் பத்து பேர் கொல்லப்பட்டனர். 3 காவலர்களும் உயிர் இழந்தனர். தொடர்ந்து கடும் மோதல் நடந்து வருகிறது.