Publish Date: Thu, 14 Feb 2008 (11:53 IST)
Updated Date: Thu, 14 Feb 2008 (11:53 IST)
இந்திய ஊடகத் துறையினர் ஈரானில் செயல்பட வரவேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளரும் துணை அமைச்சருமான சையத் முகமது அலி ஹொஸைனி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியை புது டெல்லியில் சந்தித்த போது ஈரானின் ஆர்வத்தை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தாஸ்முன்ஷி இந்த கோரிக்கை குறித்து தமது அமைச்சகம் விவாதித்து அதை நிறைவேற்ற விரைவான முயற்சி எடுக்கும் என்றார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் ஊடகங்களின் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டிய தாஸ்முன்ஷி, இந்தியாவில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதால் அவை வெளியிடும் தகவல்களை அரசின் கருத்துகளாக எடுத்துக் கொள்ள கூடாது என்று கூறினார்.
சையத் முகமது அலி ஹொஸைனி பேசும் போது, தமது நாட்டில் ஐந்து செய்தி நிறுவனங்கள் உள்ளதாகவும் இந்தியாவுடன் விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பை மேம்படுத்த அவை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நட்புறவு கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இரு நாடுகளின் ஊடகங்களுக்கும் இடையே தொடர்பு வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களில் ஈரான் நாட்டு திரைப்படங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது என்று இந்திய ஊடக முதன்மை தலைமை இயக்குனர் தீபக் சாந்து குறிப்பிட்டார். அரசாங்க அளவில் இந்திய ஈரானிய ஊடகங்களுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Webdunia
Publish Date: Thu, 14 Feb 2008 (11:53 IST)
Updated Date: Thu, 14 Feb 2008 (11:53 IST)