Publish Date: Wed, 13 Feb 2008 (10:45 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (10:44 IST)
கப்பல் போக்குவரத்து, துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்தியா- நெதர்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் நெதர்லாந்து நாட்டின் சார்பில் போக்குவரத்து, பொதுத் துறை மற்றும் நீர் நிர்வாகத் துறை அமைச்சர் கேமியல் எர்லிங்ஸ் இருவரும் கையழுத்திட்டனர்.
துறைமுக திட்டமிடுதல், கடல்சார் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, கப்பல் கட்டுதல், ஆய்வு, வளர்ச்சி, பாதுகாப்பு, இருநாடுகளுக்கிடையே சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். கடல்சார் துறையில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், "அண்மையில் இந்தியா-நெதர்லாந்து நாடுகள் வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பில் மிகவும் நெருக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 1997-ம் ஆண்டு ஒரு பில்லியன் யூரோவாக இருந்த இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், கடந்த 2006-ம் ஆண்டில் 2.77 பில்லியன் யூரோவாக அதிகரித்துள்ளதே இதற்கான சான்றாகும். ஆனால் டச்சு நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை கணக்கிடும் போது இது மிக குறைவானது. எனவே இதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்" என்றார்.
மேலும், "தேசிய கடல்சார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பில்லியன் முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கிழக்கு-மேற்கு கடற்கரை பகுதியில் சர்வதேச கப்பல் தளங்களை அமைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தவிர அகழ்வு பணியிலும் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல இந்தியாவின் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையும் செழிப்பாகி வருகிறது" என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது இந்திய கப்பல் துறை அதிகாரிகள், பொறியாளர்களுக்கு 12 உதவித் தொகைகளை வழங்கப்படுவதாக நெதர்லாந்து தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இருந்து நெதர்லாந்து துறைமுகங்களுக்கு சரக்கு பரிமாற்றம் குறித்த ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டது.
Webdunia
Publish Date: Wed, 13 Feb 2008 (10:45 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (10:44 IST)