Publish Date: Sun, 10 Feb 2008 (11:11 IST)
Updated Date: Sun, 10 Feb 2008 (11:11 IST)
மனிதநேயத்தை வளர்ப்பதுடன் எதிர்காலச் சாவல்களைச் சந்திக்கும் வகையிலான கல்வியை நமது மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வித் துறையில் முதலீடு செய்து அதைச் சீரமைப்பதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இது குறித்துப் புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நம் நாட்டில் கல்வித் துறையில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. கல்வித் துறையை 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப சீரமைக்க வேண்டியுள்ளது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதற்கான செயல்முறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்வித் திட்டம் என்று 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தைக் கூறும் அளவிற்கு கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
"நமது குழந்தைகளுக்கு எதிர்கால சவால்களை சந்திக்கும் வகையிலான நவீன கல்வியை வழங்க வேண்டும். கடந்த காலத்தின் கைதிகளாக அவர்களை நாம் ஆக்கிவிடக் கூடாது. மனிதநேயத்தை வளர்க்கக் கூடிய அதே நேரத்தில் உலகத் தேவைக்கு ஏற்ற கல்விமுறை வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. சிறந்த கல்வியை வழங்கவும் மாணவர்களின் செயல்திறனை வளர்க்கவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். சி.வி.ராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், ஹர்கோவிந்த குரானா, அப்துஸ் சலாம் போன்ற மேதைகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருக்கின்றனர் என்று எண்ண வேண்டும்.
கணிதத்துக்கான நோபல் பரிசு எனப்படும் ஏபெல் விருதைப் பெற்ற கணிதப் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆர். வரதனை அண்மையில் நான் அழைத்துப் பாராட்டியதற்காக, எனக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய பதிலில், "சென்னை மற்றும் கொல்கட்டாவில் உள்ள கல்வி நிலையங்களில் தனக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டதால் தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது" என்று கூறியிருந்தார்.
இந்தியாவில் அவர் பெற்ற அடிப்படை பயிற்சி உலகளவில் சாதனை படைக்க உதவியிருக்கிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். அவர் தனக்கென்று சலுகை கேட்காமல் மற்றவர்களைப் போல பள்ளி, கல்லூரிக்குச் சென்று வசதியான வீட்டுப் பிள்ளைகளோடு போட்டியிட்டு படித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது இங்கிலாந்து சென்று படித்தார்.
வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், போட்டித் தேர்வுகள் எழுதி உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதை நாம் காண்கிறோம். இவர்கள்தான் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தருபவர்கள்" என்றார் மன்மோகன் சிங்.