Publish Date: Sat, 09 Feb 2008 (10:46 IST)
Updated Date: Sat, 09 Feb 2008 (10:46 IST)
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வெளிக்கொணர அனைவரும் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
புது டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பால்யோகி கலையரங்கில் நடைபெற்ற "சிறிய அதிசயங்கள்" என்ற சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "வாழ்க்கையின் கடினத் தன்மையால் தமது குழந்தை பருவ சந்தோஷத்தை இழந்து வாடித் திரியும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் மீது நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அவர்களது திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர நாம் பாடுபட வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியன எப்படியோ கிடைத்துவிடுகின்றன. ஆனால் அந்த குழந்தைகளிடம் இருக்கும் இயற்கையான திறமை மற்றும் உருவாக்கும் திறன் ஆகியவை வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கு தேவையான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இந்த நிலைமாறி அந்த குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் உருவாக்கும் திறன் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆடல், பாடல், இசை மற்றும் இதுபோன்ற பல துறைகளில் அவர்களின் திறமைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.
பசந்த் பஞ்சமி என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வரும் 10.02.2008 ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை லோக் சபா தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிறது.
Webdunia
Publish Date: Sat, 09 Feb 2008 (10:46 IST)
Updated Date: Sat, 09 Feb 2008 (10:46 IST)