Publish Date: Thu, 07 Feb 2008 (11:10 IST)
Updated Date: Thu, 07 Feb 2008 (11:10 IST)
கல்வி உதவித் தொகை வழங்க மதிப்பெண் தகுதி நிர்ணயித்து வெளியிட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் மீரா குமார் கூறினார்.
தொழில் கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண் எடுத்தால்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து கடந்த வாரம் சென்னையில் தலைமைச் செயலகம் எதிரிலும், பின்னர் மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பாலான மாநிலங்களில் நுழைவுத் தேர்வு முறை உள்ளது. அங்கெல்லாம் பிரச்சனை இல்லை. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள்தான் இதுபோன்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது" என்றார்.