Publish Date: Sat, 02 Feb 2008 (10:52 IST)
Updated Date: Sat, 02 Feb 2008 (10:51 IST)
நமது நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் 60 விழுக்காடு நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு விட்டது என்று மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இது குறித்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3-வது அரங்கின் துவக்க விழாவில் அவர் பேசுகையில், "சாலைப் பணிகள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. இந்தியாவில் சாலைப் பணிகளுக்கு ரூ.1 செலவிடும் போது பொருளாதாரத்தில் ரூ.7 வளர்ச்சி ஏற்படுகிறது என்று உலக வங்கி ஒரு கணக்கை கூறியுள்ளது. இதனடிப்படையில் தங்கநாற்கரச் சாலை, கிழக்கு-மேற்கு, தெற்கு-வடக்கு இணைப்புச் சாலைப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் 2011-12-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
"10 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜி.டி.பி.)எட்டுவதற்கு கப்பல் துறை அமைச்சகம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறைகளில் 60 விழுக்காடு நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. தேவை மிக அதிகமாக உள்ளதால், இதை 1,500 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்காக ரூ.1,60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார் டி.ஆர் .பாலு.
Webdunia
Publish Date: Sat, 02 Feb 2008 (10:52 IST)
Updated Date: Sat, 02 Feb 2008 (10:51 IST)