Publish Date: Tue, 29 Jan 2008 (14:57 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (14:57 IST)
ஆண்டு ஊதியம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துவதற்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் திங்களன்று தொடங்கிய பா.ஜ.க. தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், "எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும். ஆண்டு ஊதியம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் மாத சம்பளதாரர்கள் பயனடைவர்" என்று வலியுறுத்தினார்.
மேலும் "கல்விக் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடனுக்கான வட்டியைக் கடந்த 2004-ம் ஆண்டு இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.
நிலங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ரியல் எஸ்டேட் கண்காணிப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் வீடு மிகவும் அவசியமானது. இதைக் கண்காணிக்காமல் விட்டால் அதன் விலை கட்டுக்கடங்காமல் உயரும். இதனால் சாமானியர்கள் வீடு கட்டுவது சாத்தியமில்லாமல் போகும்" என்றார் ராஜ்நாத் சிங்.