Publish Date: Fri, 25 Jan 2008 (11:16 IST)
Updated Date: Fri, 25 Jan 2008 (11:15 IST)
நமது நாட்டின் 59வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட உள்ள விழாக்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. குடியரசு தின அணிவகுப்பை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், சிறப்பு விருந்தினரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கோலாஸ் சர்கோஸியும் பார்வையிடுவார்கள்.
இதனால், அணிவகுப்பு நடைபெறவிருக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெடிபொருள்கள் கண்காணிப்பு நிபுணர்களும் அதிரடிப் படையினரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. நகரின் அனைத்து எல்லைப் பகுதியிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டெல்லி இரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.