Publish Date: Mon, 21 Jan 2008 (11:29 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (11:29 IST)
'ஒரு காலத்தில் புனிதமான சேவையாகக் கருதப்பட்ட மருத்துவத் தொழில் மெல்ல மெல்ல வியாபாரமாகி வருகிறது' என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவமனையில் சமீரா கோஹ்லி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது சம்மதம் இல்லாமல் அவரது கருப்பை அகற்றப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நவ்லேகர், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் தீர்ப்பு கூறினர்.
அப்பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.25,000 தர வேண்டும் என்றும், அவரிடம் அறுவை சிகிச்சைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மருத்துவர் பிரபா மன்சன்டாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
நமது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளும், பாமரர்களும் நல்ல மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கின்றனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகள், அங்கு படுக்கை வசதி இல்லாததால், தாழ்வாரங்களிலும், தரையிலும் அமர்ந்து கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக பல நாட்கள் காத்து கிடக்கின்றனர். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கே பல நாட்கள் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் காத்துக் கொண்டிருப்பதை காணலாம். அரசு மருத்துவமனைகளில் ஊழலும், அலட்சிய போக்கும் நிலவுகிறது.
மேலும், அங்கு போதுமான வசதிகள் இல்லாததால், ஏழைகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகள், சிகிச்சை பெற பல நாட்கள் காத்திருந்து இறந்துவிடுகின்றனர். ஏழைகளுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? எப்படியோ ஒரு வகையில் சிகிச்சை பெற்றுக் கொண்டால் போதும் என்று அனைத்து வேதனைகளையும் தாங்கிக் கொள்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகள் வியாபாரமயமாகிவிட்டன. அங்குள்ள சில மருத்துவர்கள் சுய லாபத்துக்காக, தேவையில்லாத மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். தேவையற்ற பரிசோதனைகளை செய்யச் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் புனிதமான சேவையாகக் கருதப்பட்ட மருத்துவத் தொழில் மெல்ல மெல்ல வியாபாரமாகி வருகிறது.
மருத்துவ சிகிச்சைக்கான செலவு நியாயமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்தியாவில் பின்பற்றக் கூடாது. அதனால் அதிகமாகும் செலவுகளை இந்தியர்கள் ஏற்க இயலாது. இது போன்ற பல சிக்கல்கள் மருத்துவத் துறையில் காணப்பட்டாலும், நோயாளிகளிடம் பரிவு காட்டி சிகிச்சை அளிக்கும் பல மருத்துவர்கள் நம் நாட்டில் இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Mon, 21 Jan 2008 (11:29 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (11:29 IST)