Publish Date: Mon, 21 Jan 2008 (11:19 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (11:18 IST)
நடைபாதை வியாபாரிகளின் தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வசதியாக அவர்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பதிவு செய்வதற்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. நகர வியாபாரிகள் குழு மூலமாக இவர்கள் பதிவு செய்யவேண்டும்.
புதிய திட்டத்தின்படி எல்லா பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வியாபாரிகள் குழு அமைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் இக் குழு செய்யும்.
இதன் பொருட்டு நடைபாதை வியாபாரிகளுக்கான கொள்கைகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட வரைவு மத்திய வீட்டு வசதி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகளை ஒழுங்கு படுத்துவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசுகள் உரிய சட்டங்களை இயற்ற இந்தப் புதிய திட்டம் வகை செய்கிறது. நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்பதன் அவசியத்தை இத் திட்டம் வலியுறுத்துகிறது.
ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகளுக்கு முதலில் தாக்கீது அனுப்ப வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் காலி செய்யாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும். அப்படியும் இடத்தைக் காலி செய்யாவிட்டால் அதன் பிறகே கட்டாயமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று புதிய திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரு கோடி நடைபாதை வியாபாரிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மும்பையில் மிக அதிகமாக 2.5 லட்சம் பேர் உள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 2 லட்சம் பேரும், கொல்கட்டாவில் 1.5 லட்சம் பேரும் ஆமதாபாத்தில் 1 லட்சம் பேரும் உள்ளனர்.
நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை நகர மக்கள் தொகையில் 2 விழுக்காடு. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 21 Jan 2008 (11:19 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (11:18 IST)