Publish Date: Fri, 18 Jan 2008 (17:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
மத்திய நி்தி அமைச்சகம் சார்பில் ரூ.3,491 கோடி சேவை வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ஏய்ப்பு செய்ததாக 2,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பி.சி. ஜா தெரிவித்தார்.
டெல்லியில் அசோசெம் என்று அழைக்கப்படடும் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சேவை வரி - மாறிவரும் நிலைமை என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தது. இதில் மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய உறுப்பினர் பி.சி.ஜா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.
இந்த நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் சேவை வரி ஏய்ப்பு செய்த 2,181 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ரூ.3,491 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவை வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து ரூ.386 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்ற நிதி ஆண்டில் சேவை வரி ஏய்ப்பு செய்த 4,304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் ரூ.1,995 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தனர்.
இந்த நிதி ஆண்டில் சேவை வரி வசூல் செய்வது விரைவு படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் சேவை வரியின் பங்கு மிக குறைந்த அளவாகவே உள்ளது. இதன் பங்கு மறைமுக வரி வருவாயில் 18 விழுக்காடாகவும், மொத்த வரி வருவாயில் 8.6 விழுக்காடாகவும் உள்ளது. சென்ற நிதி ஆண்டில் சேவை வரியாக ரூ.37,483 கோடி வசூலாகி உள்ளது என்று கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 18 Jan 2008 (17:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)