Publish Date: Fri, 18 Jan 2008 (14:44 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட எல்லா பறவைகளையும் அழிக்கும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தீவிரமாக நடந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் பர்தமான், பர்கானாஸ், நடியா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதனால், அங்கு வளர்க்கப்படும் எல்லாப் பறவைகளையும் அழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு எடுத்துவருகிறது.
இதுவரை, 37,500 பறவைகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும், சுமார் 4,00,000 பறவைகள் கொல்லப்பட உள்ளதாகவும் அம்மாநில கால்நடைத் துறை அமைச்சர் அனிசூர் ரஹ்மான் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக தெரியவந்தால், அவற்றை உடனடியாக அரசு சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
விமானங்கள், ரயில்களில் கோழி இறைச்சி பரிமாறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் இன்றும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இன்று காலை கொல்கட்டா நகரத்தின் வடக்குப் பகுதிகளில் சில கோழிகள் திடீரென இறந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.