Publish Date: Mon, 14 Jan 2008 (10:43 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (10:43 IST)
இந்திய தொழில்துறையினர் சீனாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சீனாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன், அவருடன் சென்றுள்ள இந்திய தொழில்துறையினருடன் கலந்துரையாடினார். அப்போது, சீனாவின் சிறப்பம்சங்கள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
"உலகமயமாக்கல் சூழலை இந்திய தொழில்துறை எதிர்கொண்டு வருகிறது. இந்த புதிய சூழலில் சீனாவும் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே சீனாவுடன் தொழில்துறையில் அதிக அளவில் உறவு ஏற்படுத்திக் கொண்டு, நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஒத்துழைப்புடன் செயல்படுவதிலும் போட்டியிடும் பாங்கிலும் நாம் சீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.
சீன தொழில் வாய்ப்புகளை இந்திய தொழில்துறையினர் ஆராய வேண்டும். புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும். சீனாவுடன் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இரு நாடுகளும் தொடர்ந்து வளர உலகில் எத்தனையோ துறைகள் உள்ளன. உலகில் பொருளாதார மந்தம் நிலவும் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவும் சீனாவும் தங்களை முன்னேற்றி அதன் மூலம் உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும். சீனாவைப்பற்றி மேற்கத்திய நாடுகளின் சிந்தனை எப்படி உள்ளதோ அந்த அடிப்படையில்தான் இந்தியர்களின் எண்ணமும் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.
இரு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வரலாற்று தேவை உருவாகி உள்ளது. இரு நாடுகளும் முன்னேறுவது சர்வதேச வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று." என்றார் மன்மோகன். அப்போது, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் இந்தியத் தொழில்துறை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்து நாங்கள் தற்போது மீண்டுவிட்டோம். இருப்பினும் அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் குறைந்த விலை பொருள்களால் இன்னும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது என்று இந்திய தொழிலதிபர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பிரதமரின் செயலர் டி.கே. நாயர், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், இந்தியத் தூதர் நிருபமாராவ் மற்றும் இந்திய தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Mon, 14 Jan 2008 (10:43 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (10:43 IST)