Publish Date: Sun, 13 Jan 2008 (16:06 IST)
Updated Date: Sun, 13 Jan 2008 (16:06 IST)
பயங்கரவாதிகளின் மிரட்டல்களை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மோப்ப நாய்ப் படை உள்ளிட்ட புதிய வசதிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையத்திற்குள் ஆறு மோப்ப நாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. இவற்றைக் கொண்டு அலுவலகக் கட்டடங்கள், கார் நிறுத்தும் இடங்கள், சரக்குகளைக் கையாளும் பகுதி போன்ற இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தப்படும்.
வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களை விமான நிலையத்திற்குள் கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதன்படி, நாட்டிலேயே மோப்ப நாய்கள் படை அமைக்கப்பட்டுள்ள முதல் விமான நிலையம் என்ற பெருமையை இந்திராகாந்தி விமான நிலையம் பெறும் என்றும் விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்
விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக, ரேடார்கள், கண்காணிப்பு கேமிராக்கள், பூமிக்கடியில் பதிக்கப்படும் கேபிள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நான்கடுக்கு பாதுகாப்பு திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, உள்நாட்டு விமான நிலையத்தில் 100 கண்காணிப்புக் கேமிராக்களும், பன்னாட்டு விமான நிலையத்தில் 205 கண்காணிப்புக் கேமிராக்களும் கூடுதலாகப் பொருத்தப்பட உள்ளன.
இவைதவிர பயணிகளின் உடைமைகளை விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கும் திறன் கொண்ட நான்கு புதிய எக்ஸ்ரே கருவிகளை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் டயல் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.