Publish Date: Thu, 10 Jan 2008 (19:35 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (19:35 IST)
தொகுதி மறுசீரமைப்பில் இருந்த விலக்களிப்படும் என்ற கருதப்பட்ட 5 மாநிலங்களில் ஜார்கண்ட் தவிர மற்ற 4 வட கிழக்கு மாநிலங்களுக்கும் புதிய சட்டத்தின் மூலம் விலக்களிக்க மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
இதில், ஜார்கண்ட், அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்வதில் சிக்கல்கள் எழுந்தன. நீதிமன்றங்களின் தடை மூலமாக, மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத கட்டாயம் உருவானது.
இதனால், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அதற்குள் ஜார்கண்ட் மாநிலத்தில், அரசின் கொள்கைப்படி தனித் தொகுதிகளை குறைத்துக் கொடுக்க மத்திய அரசு முன்வந்ததை அடுத்து அங்கு சிக்கல் சீரடைந்தது.
இந்நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இப்பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
பின்னர், ஜார்கண்ட் தவிர மற்ற 4 வடகிழக்கு மாநிலங்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பில் இருந்து புதிய சட்டத்தின் மூலம் விலக்களிக்க முடிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
இதற்கான சட்ட முன்வடிவு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில், புதிய தொகுதி எல்லைகள் அமலுக்கு வருமா என்று கேட்டதற்கு, இது குறித்து முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்குத் தான் அதிகாரம் உள்ளது என்றார் தாஸ்முன்ஷி.
Webdunia
Publish Date: Thu, 10 Jan 2008 (19:35 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (19:35 IST)