Publish Date: Tue, 08 Jan 2008 (11:25 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (11:25 IST)
சிறிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 108.6 கோடி டன்னாக உயர்த்தப்படும் என்று கடல்சார் மாநிலங்கள் உறுதியளித்துள்ளதாக, மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கடலோர மாநிலங்கள் வளர்ச்சிக் குழுவின் 9-வது கூட்டம் கோவாவில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியதாவது:
11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், அண்மையில் ஒப்புதல் தரப்பட்ட 'மத்திய மாதிரி சலுகை ஒப்பந்தம்'-ஐ பயன்படுத்தி பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து கடலோர திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கும். தற்போது இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 73.3 கோடி டன்னாக உள்ளது. இதை 2011-2012-ஆம் ஆண்டுக்குள் 150 கோடி டன்னாக உயர்த்துவதற்காக துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது மிகவும் அவசியம்.
பெரிய துறைமுகங்கள் தவிர மற்ற துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை 108.6 கோடி டன்னாக உயர்த்துவதற்கு கடல்சார் மாநிலங்கள் உறுதிபூண்டுள்ளன. ஆந்திர பிரதேசம், கேரளா, ஓரிசா, கோவா ஆகிய மாநிலங்கள் மாநில கடல்சார் வாரியங்களை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்கவுள்ளன. மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டமான - உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டத்தை 11-வது திட்ட காலத்திலும் மாநில அரசுகள் தொடர வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
மேலும், கடல்சார் துறைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மாதிரி பயிற்சி மற்றும் சான்றளிக்கும் முறைக்கான நெறிமுறைகளை கடல்சார் மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து தயாரிக்குமாறு கப்பல் போக்குவரத்திற்கான முதன்மை இயக்குனருக்கு டி.ஆர்.பாலு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கடல்சார் துறைக்கான மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் மாநில நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் பங்கேற்றார்.