Publish Date: Tue, 08 Jan 2008 (11:12 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (11:12 IST)
''மருத்துவமனைகளை நிதியம்சங்களின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை'' என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் மைக்கேல் லெவிட் 6 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவரை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.
பின்னர் இருவரும் இந்திய தொழிற் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டனர். மருத்துவம், பொது சுகாதாரம், உயிர் அறிவியல், சுகாதார அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சி, மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், இந்தியா-அமெரிக்க நாடுகளுக்கிடையே மிகச் சிறந்த உறவு உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் இரு நாடுகளும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களின் நலனுக்காக மேற்கொள்ள உள்ளன. எய்ட்ஸ் ஆய்வு, தடுப்பூசி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய மருத்துப் பொருள் ஆணையம் 10 வகையான பிரிவுகளில் தனது பணிகளை மேற்கொள்ளும், அங்கீகாரம் வழங்குதல் இந்திய மருந்து முறைகளை கவனித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தும்.
ஓட்டல் துறையைப் போன்று மருத்துவமனைகளை நிதியம்சத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. இது குறித்து சுகாதாரத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழு கவனிக்கும். சமீபத்தில் சுகாதார காப்பூறுதித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அன்புமணி கூறினார்.
எய்ட்ஸ் தடுப்புக்கு இருமடங்கு நிதி - அமெரிக்கா!
முன்னதாக மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாசும், அமெரிக்க சுகாதாரச் செயலர் மைக்கேல் லெவிட்டும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எய்ட்ஸ் நோயாளிகளை பார்த்தனர்.
இந்த மருத்துவமனையில் உள்ள ஆய்வுக் கூடம், கவுன்சிலிங் மையம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தபின் மைக்கேல் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மருத்துவமனை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எய்ட்ஸ் ஒழிப்பில் அமெரிக்கா அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும். மேலும் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதி வரும் ஆண்டுகளில் இருமடங்காக்கப்படும்" என்றார்.
Webdunia
Publish Date: Tue, 08 Jan 2008 (11:12 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (11:12 IST)