Publish Date: Fri, 04 Jan 2008 (11:17 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:17 IST)
நமது நாட்டில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டிற்குள் மின் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், முதல் கட்டமாக 2009-ஆம் ஆண்டுக்குள் 1.15 லட்சம் கிராமங்கள் மின்மயமாக்கப்படும். அதேசமயம் 2.34 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்படும். மின் வசதி இல்லாத எஞ்சிய கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு 2012-ஆம் ஆண்டுக்குள் மின் இணைப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஊரக மின் திட்டத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 11ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் "ராஜீவ் காந்தி கிராமிய வித்யூதிகரன் யோஜனா' திட்டத்தை ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதற்காக திருப்பி அளிக்கப்படும் தொகையை ரூ.1500-லிருந்து ரூ.2.200-ஆக உயர்த்துவது, இந்திய -ஐஸ்லாந்து இடையேயான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஆகிய திட்டங்களுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு' வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Fri, 04 Jan 2008 (11:17 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:17 IST)