Publish Date: Fri, 04 Jan 2008 (11:14 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:13 IST)
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பராமரிப்பு விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து மாநாடு புதுடெல்லியில் துவங்கியது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது :
மோட்டார் வாகனத்திற்கென ஆய்வு மற்றும் பராமரிப்பு மைய விதிகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வரும் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் போக்குவரத்து துறையின் திட்ட அறிக்கையில் இது இணைக்கப்படும்.
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன சாலை வசதி 2007 சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க காரியக்குழு அமைக்கப்படவுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் போக்குவரத்து துறையில், நடைமுறைகளில் ஒளிவுமறைவு இருக்காது. மேலும் வாகன பதிவு முறைகளும் நவீனமாக்கப்படும்.
மேலும் பேருந்து பாடிபில்டர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கென சான்றிதழ் குழுக்கள் அமைப்பதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகள் டிரக் பாடிபில்டர்களுக்கும் விரிவாக்கப்படும்.
ஒரு தனி சட்டத்தின் மூலம் தேசிய சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக் குழுவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம மற்றும் செயல்பாடுகளின் பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும். மோட்டார் வாகனங்களில் தர பாதுகாப்பு குறித்தும் இந்தக் குழு நிர்ணயம் செய்யும்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
வாகனங்களில் அதிக எடை ஏற்றிச் செல்வது குறித்துப் பேசிய அமைச்சர் பாலு, இனி வரும் காலங்களில் அந்த சரக்கின் சொந்தகாரருக்கும், ஏஜென்சிகளும் பொறுப்பாகும் வகையில் மோட்டார் வாகன (திருத்தங்கள்) சட்டம் 2007-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சரக்கின் சொந்தக்காரருக்கும் ஏஜென்சிகளுக்கும் தெரிந்தே அதிக அளவு சரக்கு ஏற்றப்படுவதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். .
மேலும் சுமார் ரூ.732.75 கோடி செலவில் பல மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. வரும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இது செயல்படுத்தப்படும். இதற்காக தங்கநாற்கர சாலை, வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு இணைப்புச் சாலைகளில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையங்களை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Fri, 04 Jan 2008 (11:14 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:13 IST)