Publish Date: Thu, 03 Jan 2008 (18:44 IST)
Updated Date: Thu, 03 Jan 2008 (18:44 IST)
புவி வெப்பமடைதலுக்கும், அதன் விளைவாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கும் காரணமான முன்னேறிய நாடுகளே வெப்பமடைதலை கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் அதிக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 95வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன் சிங், தொழில், பொருளாதார ரீதியாக முன்னேறயுள்ள நாடுகளே வெப்பநிலை மாற்றத்திற்கான சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு காரணமானவர்கள். இதுவரை ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்வதற்கான பெரும் பொறுப்பும் அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்று கூறினார்.
வானிலை மாற்றமெனும் மாபெரும் சவாலை 3 கட்ட நடவடிக்கைகளின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்றும், ஒன்று, உலகளாவிய அளவிலும், அடுத்தபடியாக தேச அளவிலும், இறுதியாக உள்ளூர் அளவிலும் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சவால்களை யதார்த்தமாக சந்திக்கக்கூடிய தீர்வுகளை நாம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நமது சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம், நமது முன்னேற்றத்திற்கான மாற்று வழிகளை காணவேண்டும் என்று கூறினார்.
உணவு உற்பத்தி, மிகக் குறைவாகவே உள்ள நீர் ஆதாரங்களைக் காத்தல், எரிசக்தி உற்பத்தி, போக்குவரத்து மற்றும் கட்டடத் தொழில்நுட்பம் ஆகிய 5 பெரும் துறைகளில் போர்க்கால அளவில் நமது அறிவைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீர் ஆதாரங்களையும், விளை நிலங்களையும் சீரழிக்காமல் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது அவசியம் என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாகி வரும் வானியல் மாற்றம் விவசாயத்தையும், விவசாய உற்பத்தியையும் பாதிக்காத அளவிற்கு நீண்டகால நோக்கில் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங், இதற்கான அடிப்படைகளைக் கண்டறிய வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகளுக்கு உயிரூட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Webdunia
Publish Date: Thu, 03 Jan 2008 (18:44 IST)
Updated Date: Thu, 03 Jan 2008 (18:44 IST)