Publish Date: Mon, 31 Dec 2007 (17:13 IST)
Updated Date: Mon, 31 Dec 2007 (16:54 IST)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி பூஜைகள் துவங்கின. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு உற்சவத்தின் நிறைவாக பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தோன்றும். அன்று நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஜோதியை வணங்கி தரிசிப்பார்கள். மொத்தம் 15 நாள்கள் கோயில் நடை திறந்திருக்கும்.
மகரஜோதி உற்சவத்துக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
தந்திரி கண்டரரு மகேஸ்வரு அய்யப்பனின் தவ அலங்காரத்தை நீக்கி, அபிஷேகம் செய்து மகர ஜோதி உற்சவம் நடத்த உத்தரவு கேட்டார்.
முன்னதாக அரவண பாயசம் தட்டுப்பாடு இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பக்தருக்கும் 10 கேன்கள் அரவண பாயசம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை தேவஸ்வம் வாரியம் ரூ.52 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2.45 கோடி குறைவு. அரவண பாயசம் விற்பனையில் மட்டும் கடந்த ஆண்டை விட ரூ.6 கோடி வருமானம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.