Publish Date: Sun, 23 Dec 2007 (15:02 IST)
Updated Date: Sun, 23 Dec 2007 (15:02 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வந்த தீவிரவாதிகளை சிறப்பு கூடுதல் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் அம்மாநில முதலமைச்சர் மாயாவதியின் இல்லம் அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்த அந்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் பிரிஜ் லால் கூறுகையில், இன்று காலை 5.50 மணியளவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் இருந்த காரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடலில் இருந்து குண்டு பொருத்தப்பட்ட பெல்ட் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அதன் பேட்டரி, டெட்டனேட்டர், கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் வந்த காரில் இருந்து முழுவதும் நிரப்பப்பட்ட ஏகே-47 ரக துப்பாக்கியும் கிரானெட் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் அவர்கள் வந்த மாருதி 800 கார் இருக்கைக்குக் கீழே கருப்பு பையில் அதிகளவில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.
அந்த கார் லக்னோவில் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் உள்ளது. அது போலியானதாக இருக்கலாம் என்றும் இவர்கள் லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
நமது நாட்டு உளவு அமைப்பின் மூலம் உபி முதலமைச்சரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவர்கள் இந்தியா-நேபாள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி வந்துள்ளனர் என்று பிரிஜ் கூறினார்.
மேலும், அவர்கள் வைத்திருந்த உருது வரைபடத்தில் உத்திரப்பிரதேச முதலமைச்சரின் வீடு குறியிடப்பட்டுள்ளதையும், எனவே இவர்கள் முதலமைச்சரை குறிவைத்தே தாக்குதல் நடத்த வந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.