நமது நாட்டில் அதிகரித்துவரும் நக்ஸல் தீவிரவாதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க., நக்சலிஸம் பற்றி அறிக்கை விட்டால் போதாது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், இச்சிக்கலை எதிர்கொள்வதற்காக பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாக்கிய ஒருங்கிணைந்த செயல் திட்டம் மற்றும் செயற்குழு நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் அரசு கைவிட்டுவிட்டது என்று குற்றம்சாற்றினார்.
சட்டீஷ்கர், ஆந்திர பிரதேச மாநிலங்களில் நடந்த தேர்தல்களின் போது அங்குள்ள நக்சல் குழுக்களுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது என்றும், ஆந்திர அரசின் சண்டை நிறுத்த நடவடிக்கைகள் நக்சல் குழுக்கள் புத்துணர்ச்சியுடன் வலுப்பெற்றுப் பரவுவதற்கு பொன்னான வாய்ப்பாக அமைந்துவிட்டன என்றும் அவர் கூறினார்.