Publish Date: Mon, 17 Dec 2007 (10:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் பயங்கரக் கலவரத்தில் ஈடுபட்டதுடன், சிறை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டு 110 நக்சலைட்டுகள் உட்பட 299 கைதிகளை விடுவித்தனர்.
சத்தீஷ்கரில் சக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள சிறையில் 150 நக்சலைட்டுகள் உட்பட 380 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு நேற்று மாலை 4.30 மணியளவில் கைதிகளுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் கைதிகளில் ஒருவனான நக்சலைட் தளபதி சுஜித் குமார் என்பவன், சிறை காவலர் ஒருவரைத் திடீரென தாக்கியதுடன், அவரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துச் சுட்டான்.
அதற்குள் பிற நக்சலைட்டுகளும் அவனுடன் சேர்ந்து கொண்டு சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை சரமாரியாக தாக்கினார்கள். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து சுட்டதுடன் சிறைக் கதவுகளையும் நக்சலைட்டுகள் திறந்து விட்டனர்.
இந்நிகழ்வில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 110 நக்சலைட்டுகள் உட்பட 299 பேர் தப்பி விட்டனர். மேலும், சிறை காவலர்களிடம் இருந்து பறித்த ஆறு துப்பாக்கிகள், ஒரு வயர்லெஸ் ஆகியவற்றை நக்சலைட்டுகள் எடுத்துச் சென்றனர். இது தவிர, சிறையில் உள்ள ஆயுதக் கிடங்கை திறந்து அதில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.
நக்சலைட் கைதிகள் நடத்திய இந்த தாக்குதலில் சுனில் பூஜாரி, ராஜ்குமார் சோரி உட்பட மூன்று சிறை காவலர்களும், 2 கைதிகளும் படு காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் தண்டேவாடா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் பாஸ்டர் மண்டல காவல்துறை ஐ.ஜி. விஜி, தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் சிறைக்கு விரைந்தனர்.
நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் சர்மா கூறுகையில், `நக்சலைட்டு ஆதரவாளர்களின் துணையோடு இந்த சிறை தகர்ப்பு நிகழ்வு நடந்துள்ளது. இது முற்றிலும் திட்டமிட்ட சதி' என்றார்.
பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்களின் அட்டகாசம் இருந்து வருகிறது. சத்தீஷ்கரில் உள்ள பாஸ்டர் என்ற பகுதியில் நக்சலைட்டுகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 200 காவலர்கள் உட்பட 800 பேர், நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.