Publish Date: Thu, 13 Dec 2007 (19:46 IST)
Updated Date: Thu, 13 Dec 2007 (19:45 IST)
கொலைக்குற்ற வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வெளியே அளித்த வாக்குமூலமும், அவர் கொலை செய்திருப்பார் என்று உறுதி செய்வதற்கான நோக்கச் சான்றும் குற்றத்தை உறுதி செய்து தண்டிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
மராட்டிய மாநிலத்தில் தனது மைத்துனர் உத்தம் சோன்வாலே என்பவரை 1995 ஆம் ஆண்டும் டிசம்பர் 19 ஆம் தேதி கேசவ் என்பவர் கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இருவருக்கும் இடையே இருந்த பணத் தகராறே கொலை¨க்கான காரணம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நான்டெட் மாவட்டத்தில் உள்ள டியூல்கோவான் அமர்வு நீதிமன்றம், கொலைக் குற்றம் சாற்றப்பட்ட கேசவ் மீது தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து கேசவ் செய்த மேல் முறையீட்டை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கொலை செய்வதற்கான காரணம், கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த சாட்சியங்கள், தனது மைத்துனரை தான் கொலை செய்ததாக தனது மனைவியிடம் கேசவ் கூறியது, கொலை செய்யப்பட்டவரின் ரத்தம் தொய்ந்த ஆடை கேசவ் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது, கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி குற்றவாளியால் இருப்பிடம் காட்டப்பட்டு புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட போன்ற அனைத்தும் அந்தக் கொலையை கேசவ்தான் செய்தார் என்று உறுதிபடுத்துவதற்குப் போதுமானது என்று கூறி தண்டனையை உறுதி செய்தது.
இதனை எதிர்த்து கேசவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், எஸ்.பி. சின்ஹா, ஹெச்.எஸ். பேடி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, கொல்லப்பட்டவரின் எலும்புகள் 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை கூறியதை ஏற்க மறுத்தது. கொல்லப்பட்டவரின் ஆடை ரத்தத்துடன் கொலையாளியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது உள்ளிட்ட மற்ற சான்றுகளும் கொலையாளி கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது ஆகிய எல்லாவற்றையும் விட, நான்கே நாட்களில் கொல்லப்பட்டவர் வெறும் எலும்பாகக் கிடந்தது எப்படி என்று கேள்வி எழுப்பியது.
நான்கு நாட்களுக்குள் கொல்லப்பட்டவரின் உடலை கழுகுகளும், விலங்குகளும் பிய்த்து தின்றுவிட்டன என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்பதற்கில்லை என்று நிராகரித்த நீதிபதிகள், ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே குற்றவாளி கூறியதாக சொல்லப்பட்ட வாக்குமூலம், அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டதாக சொல்லப்படும் சாட்சிகள் ஆகியன மட்டுமே குற்றத்தை உறுதி செய்வதற்கு போதுமானவை அல்ல என்றும், அதேபோல, இருவருக்கும் இடையே பணத்தகராறு இருந்தது என்ற காரணத்தை வைத்து கொலைக்கான நோக்கத்தை உறுதிபடுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல என்று தீர்ப்பளித்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பு முன்வைத்த சான்றுகளில் உள்ள ஓட்டைகளை ஆழமாகப் பார்க்காமல் மும்பை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது என்று கூறிய நீதிபதிகள், "குற்றத்திற்கான நோக்கம், நீதிமன்றத்திற்கு வெளியே அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ஆகியன மட்டுமே கொலைக் குற்றத்தை உறுதி செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் ஆகாது" என்று தீர்ப்பளித்தனர்.
Webdunia
Publish Date: Thu, 13 Dec 2007 (19:46 IST)
Updated Date: Thu, 13 Dec 2007 (19:45 IST)