Publish Date: Thu, 13 Dec 2007 (14:07 IST)
Updated Date: Thu, 13 Dec 2007 (14:05 IST)
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இத்தாலி தொழிலதிபர் குட்ரோக்கியை கைது செய்ய உதவும்படி சர்வதேச காவல்துறைக்கு (இன்டர்போல்) மத்தியப் புலனாய்வுக் கழகம் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.
போபர்ஸ் பீரங்கி வாங்கப்பட்டதில் நடந்த 64 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்தும், இந்த பேரத்தில் தரகராகச் செயல்பட்ட குட்ரோக்கியைக் கைது செய்ய டெல்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பது பற்றியும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில் பிடிபட்ட குட்ரோக்கியை இந்தியாவுக்கு அனுப்புமாறு ம.பு.க. கோரியதை அர்ஜென்டினா நிராகரித்தது. சுதந்திர தினத்தன்று அவரை அர்ஜென்டினா விடுவித்தது. அங்கிருந்து அவரது சொந்த நாடான இத்தாலிக்குச் சென்றார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களை நாடு கடத்த சட்டம் இடமளிக்கவில்லை என்று ஏற்கனவே இத்தாலி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குட்ரோக்கியை பிடிக்க உதவுமாறு சர்வதேச காவல்துறைக்கு ம.பு.க. கடிதம் அனுப்பியிருப்பது, ஒரு சம்பிரதாயத்துக்குத்தான் என்று போஃபர்ஸ் ஊழல் வழக்கை விசாரிக்கும் சில அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.