Publish Date: Mon, 10 Dec 2007 (12:47 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (12:47 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் அரசை 'மரண வியாபாரிகள்' என்று விமர்சித்ததற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நரேந்திரமோடி பேசியபோது, போலி என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசினார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் அனுப்பிய தாக்கீதுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அளித்துள்ள விளக்கத்தில், ''ஆட்சியாளர்களை மரண வியாபாரிகள் என்று விமர்சித்த சோனியா காந்தி, குஜராத்தில் ஹிந்து பயங்கரவாதம் பரவியுள்ளதாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று குற்றம்சாற்றி இருந்தார்.
இந்நிலையில், மோடியின் விளக்கம் பற்றிப் பரிசீலிப்பதற்காக நடந்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. எல்லா மாநில தேர்தல் ஆணையர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஹிந்து பயங்கரவாதம் பற்றிய பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், ஹிந்துக்களுக்கு எதிரானவர் சோனியா காந்தி என்று கூறியதற்காக பா.ஜ.க. தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோருக்கும் தாக்கீது அனுப்பப்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் நாளைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சோனியாவுக்கு எதிராக குஜராத் மாநில பா.ஜ.க. பொதுச் செயலர் அனுப்பியுள்ள புகாரில்,"எனது சகோதர சகோதரிகள், குழந்தைகளில் பலரும் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அரசிடம் இருந்து பாதுகாப்பு பெற்றுவரும் குற்றவாளிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். குஜராத் ஆட்சியாளர்கள், பொய்யர்களாகவும், துரோகிகளாகவும் அச்சம், மரண வியாபாரிகளாகவும் இருப்பதுதான் இன்றைய உண்மை நிலையாகும்'' என்று சோனியா பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் நகலும், டிசம்பர் 1 ஆம் தேதியன்று பேசிய அவருடைய பேச்சின் குறுந்தகடும் சோனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், நரேந்திர மோடி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மோடியின் பதிலை கவனமாக பரிசீலிக்க வேண்டி இருப்பதால், அதுபற்றி முடிவு செய்ய அவகாசம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறுபான்மையோருக்கு நல உதவி பற்றி, மத்திய அரசு சார்பில் குஜராத் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும், அதுகுறித்து பிரதமர், சம்பந்தப்பட்ட துறையின் மந்திரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் செய்துள்ளது.
Webdunia
Publish Date: Mon, 10 Dec 2007 (12:47 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (12:47 IST)