Publish Date: Fri, 07 Dec 2007 (10:42 IST)
Updated Date: Fri, 07 Dec 2007 (10:41 IST)
வயதான பெற்றோரை பாதுகாக்கத் தவறும் வாரிசுகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அளிப்பதற்கான சட்டவரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
பெற்றோர், முதியோர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டவரைவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டவரைவு, வயதான பெற்றோரை அவர்களது வாரிசுகள் பாதுகாக்க வகை செய்கிறது. அவ்வாறு பாதுகாக்கத் தவறும் வாரிசுகள் மீது பெற்றோர் புகார் செய்யலாம். அதன்பேரில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வாரிசுக்கு 3 மாத சிறை தண்டனை கிடைக்கும். இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
மேலும், வயதான பெற்றோரின் புகார்களை விசாரிப்பதற்காக மாவட்டம் தோறும் தீர்ப்பாயம் அமைக்க இந்த சட்டவரைவு வகை செய்கிறது. ஏழை, வாரிசு இல்லாத முதியோருக்காக முதியோர் இல்லங்கள் அமைப்பதற்கு, இந்த சட்டவரைவு வகை செய்தாலும், முதியோர் இல்லங்கள் அமைப்பது கடைசி வழிமுறையாகவே இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
இத்தகவல்களை மாநிலங்களவையில் மத்திய சமூகநலத்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவையில் இந்த சட்டவரைவு மீதான விவாதத்தை பா.ஜ.க. உறுப்பினர் கியான் பிரகாஷ் பிலனியா தொடங்கி வைத்து பேசினார். வயதான அவர் சக்கர நாற்காலியில் வந்து பேசினார். முதியோர் நிலைமை பற்றி பேசியபோது, அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
''முதியோர் மீது அன்பும், மரியாதையும் செலுத்தும் பாரம்பரியம் கொண்ட நாடு இந்தியா. ஆனால் பெற்றோரை பிள்ளைகள் பாதுகாப்பதற்கு சட்டம் தேவைப்படும் அளவுக்கு நாகரீகம் சீரழிந்து விட்டது. பாதுகாப்பு கோரி அரசிடம் முதியோர் புகார் செய்யும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது. என்ன வாழ்க்கை இது?
ராமர் தனது வளர்ப்புத் தாய் கைகேயின் பேச்சுக்குகூட கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தார். அத்தகைய மனிதர்களை தந்த நாடு, முதியோர்களை பராமரிப்பதற்கு வழிவகைகளை ஆராய்வதை பார்க்கும்போது இதயம் கனக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் இந்த சட்டவரைவில் சேர்க்க வேண்டும்'' என்றார் அவர்.