Publish Date: Tue, 27 Nov 2007 (12:35 IST)
Updated Date: Tue, 27 Nov 2007 (12:34 IST)
இந்திய சர்வதேச பொதுமன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் குழுக்கள் வருகிற 28 முதல் 30 ஆம் தேதிவரை நந்திகிராமிற்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளன.
இந்தக் குழுக்களில் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.என்.பார்கவா, புது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விருந்தா கிரோவர், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசிய ஆய்வாளர் மீனாட்சி கங்குலி, சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்தியப் பிரிவின் இயக்குநர் முகுல் சர்மா ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரையும் இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
வன்முறையால் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார பாதிப்புகள், ஐ.நா நிர்ணயித்துள்ள உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை விதிகளில் ஏற்பட்டுள்ள மீறல்கள் ஆகியவை குறித்து அறிக்கை தயாரித்து வெளியிடவும் இக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.