மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணைய விடுதலை வழங்கியது.
இவ்வழக்கில், சஞ்சய் தத் உள்பட தடா நீதிமன்றத்தில் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் பிணைய விடுதலை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பிணைய விடுதலை மனு மீதான விசாரணை நடந்தபோது ஆஜரான சஞ்சய் தத்தின் வழக்கறிஞர், சஞ்சய் தத்தின் மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதே தவிர, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அல்ல என்று வாதிட்டார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அப்போது, வழக்கு விசாரணை காலத்தில் சிறையிலிருந்த சஞ்சய் தத்தின் நடத்தை மிகவும் திருப்திகரமாக இருந்ததால் அவருக்கு பிணைய விடுதலை வழங்க வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனால் தீர்ப்பு நகல் வழங்கப்படும்வரை சஞ்சய் தத்திற்கு இடைக்காலப் பிணைய விடுதலை வழங்கி தடா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரணடைந்தார்.