Publish Date: Fri, 23 Nov 2007 (15:53 IST)
Updated Date: Fri, 23 Nov 2007 (15:52 IST)
உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ, பைசாபாத், வாரணாசி நகரங்களில் சற்று முன் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
புனிதத் தலமான வாரணாசியில் மட்டும் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பைசாபாத், லக்னோ, வாரணாசி நகரங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெளியில் குண்டுகள் வெடித்துள்ளன.
இதில் பைசாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் ஐந்து நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைசாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. அந்த குண்டில் கலக்கப்பட்டிருந்த சிறு சிறு குண்டுகள் சிதறி பலியானவர்களை தாக்கியுள்ளது காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
லக்னோ குண்டுவெடிப்பில் 2 பேர் பலி!
உ.பி. தலைநகர் லக்னோவிலுள்ள அமர்வு நீதிமன்றவளாகத்தில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தபோது, மதியம் 1.25 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இதில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட அமளியால் நெரிசல் ஏற்பட்டது. நீதிமன்றப் பணியாளர்களும், வழக்கறிஞர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து சாலைகளுக்கு ஓடி வந்தனர்.
லக்னோ மண்டல காவல்துறை தலைவர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தார். இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்று அவர் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திற்குள் வேறு ஏதாவது குண்டுகள் உள்ளனவா என்று காவலர்கள் தேடி வருகின்றனர்.
ஃபைசாபாத்தில் 7 பேர் பலி!
லக்னோ தாக்குதலுக்குப் பிறகு 4 நிமிடத்திற்குள் ஃபைசாபாத் நகரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றவளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டும் சைக்கிளில்தான் வைக்கப்பட்டிருந்த தாகக் கூறப்படுகிறது.
இதில் 7 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஃபைசாபாத் நகர நீதிமன்ற வளாகத்திற்குள் மேலும் 2 சைக்கிள் குண்டுகள் வெடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வல்லுநர்கள் அவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வாரணாசியில் 6 பேர் பலி
வாரணாசியில் குற்றவியல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் குண்டு வெடித்துச் சிதறியது. இதில், சாலையில் சென்றவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இவர்களில் 6 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
சத்தம்கேட்டு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் ஓடிவந்த வழக்கறிஞர்கள் பதற்றமான சூழலுக்கு இடையிலும் குண்டுவெடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களிடம் காவல்துறையினர் சமரசப் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
நண்பகல் 1.26 மணி முதல் 1.30 மணிக்குள் மூன்று முக்கிய நகரங்களில் நீதிமன்றங்களைக் குறிவைத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிகழ்விடங்களுக்கு கூடுதல் காவல் படைகளை அனுப்ப மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட சதிச்செயல்
இந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவை என்று மத்திய உள்துறை துணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். தீவிரவாதிகளின் சதிச்செயலா என்று கேட்டதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார். மாநிலத்தின் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்வையடுத்து தலைநகர் லக்னோவில் உயர்மட்டக் குழுக் கூட்டம் கூடியுள்ளது. இக் கூட்டத்திற்கு பிறகே முழு விவரம் தெரியவரும்.
உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை அடுத்து டெல்லி, மும்பை நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர். 62 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.