Publish Date: Tue, 20 Nov 2007 (17:57 IST)
Updated Date: Tue, 20 Nov 2007 (17:57 IST)
'நந்திகிராமில் நடந்த நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
''நந்திகிராம் நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானது. அதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், சொத்துகளை இழந்தவர்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நந்திகிராம் நிகழ்வுகளால் உருவாகியுள்ள பதற்றத்தையும், இயல்பாகப் பெருக்கெடுத்துள்ள கவலைகளையும் மேற்குவங்க அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்புப் படைகளை பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
எல்லாத் தரப்பு மக்களையும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் விருப்பங்களை பொருட்படுத்தாமல் சமமாகப் பாவித்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும்'' என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் சென்ற பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இப்பதிலை அளித்துள்ளார்.