Publish Date: Sun, 11 Nov 2007 (16:27 IST)
Updated Date: Sun, 11 Nov 2007 (16:27 IST)
மும்பை துறைமுகத்தில் ரூ.1228 கோடி மதிப்பீட்டில் புதிதாக சரக்கு பெட்டக முனையம் அமைக்கவும், தற்போதுள்ள சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
''இத்திட்டம் முழுவதும் உருவாக்கி இயக்கி ஒப்படைக்கும் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மொத்த மதிப்பீடான ரூ.1228 கோடியில், இத்திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ரூ.862 கோடியையும் மீதமுள்ள தொகையை மும்பை துறைமுகமும் முதலீடு செய்யும்.
கடலுக்குள் அமைக்கப்படும் இரண்டு கப்பல் துறைகள், உள்ளே வருவதற்கான வழி உள்ளிட்ட வசதிகளை தனியார் நிறுவனம் உருவாக்கும். கடலுக்குள் 14.5 மீட்டர் நீளமுள்ள கப்பல்கள் வருவதற்கான வழி, கப்பல் திரும்புவதற்கான வட்டப்பாதை அமைத்தல், இதர பணிகளை மும்பை துறைமுகம் உருவாக்கும்
மும்பையில் கப்பல் போக்குவரத்து தேவைகளை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும். இதனால் 96 லட்சம் டன் சரக்குகளை கூடுதலாக கையாள முடியும்'' என்று அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.