Publish Date: Wed, 07 Nov 2007 (18:34 IST)
Updated Date: Wed, 07 Nov 2007 (18:34 IST)
நமது நாட்டின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கக்கூடிய இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்றும், அந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேசி இறுதி செய்யவேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள பாதகமான பகுதிகளை நீக்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக புதுடெல்லியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் வீட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று கூடி விவாதித்தனர்.
அப்போது, அமெரிக்க முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்டு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அணுசக்தி ஆணையத் தலைவர் அணில் ககோட்கர் ஆகியோர் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துத் தெரிவித்த விடயங்கள் ஆராயப்பட்டன.
பின்னர் பா.ஜ.க சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் உள்ள உறவை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது என்றுகூறப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பா.ஜ.க.விற்குள் குழப்பம் நிலவுவது போல ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த அறிக்கை மறுத்துள்ளது.
இடதுசாரிகளைப் போல அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகள் தங்களிடம் இல்லை என்றும், நமது வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களைத்தான் தாங்கள் எதிர்பதாகவும் பா.ஜ.க கூறியுள்ளது.
Webdunia
Publish Date: Wed, 07 Nov 2007 (18:34 IST)
Updated Date: Wed, 07 Nov 2007 (18:34 IST)