பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் செய்தியாளர்களைத் தாக்கியதைக் கண்டித்து இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாட்னாவில் சிறுமி கொலை தொடர்பாக கருத்துக் கேட்கச் சென்ற செய்தியாளர்கள் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ ஆனந்த் சர்மாவின் அடியாட்களால் தாக்கப்பட்டனர்.
இதைக் கண்டித்து முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடப்பட்டது. இதற்கு, காங்கிரஸ், லோக் ஜனசக்தி, இடதுசாரி கட்சிகள், பகுஜன்சமாஜ் கட்சி உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
முழு அடைப்பின் காரணமாக, தலைநகர் பாட்னாவில் பெருமபாலான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பாட்னா பல்கலைக் கழகம் இயங்கியது. ஆனால் மாணவர் வருகை குறைவாக இருந்தது.
இதேபோல் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் தக் பங்களா சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
பாட்னாவில், மகாத்மா காந்தி பாலம் அருகே சாலையின் குறுக்கே தடுப்புக்களை அமைத்து எதிர்க்கட்சியினர் வாகன மறியலில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் மாநில நிர்வாகிகள் அப்துல்பாரி சித்திக், எம்.எல்.ஏ கஜேந்திர சிங், லோக் ஜனசக்தி எம்.பி சுரஜ்பான் சிங், சிபிஐ எம்எல் கட்சித் தலைவர் கே.டி.யாதவ் உட்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நிகழ்விற்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராப்ரி தேவி கோரிக்கை விடுத்தார்.
தேசிய நெடுஞ்சாலை எண். 28, 77, 30 ஆகியவற்றில் பல இடங்களில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் மறியல் செய்ததால், போக்குவரத்து தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.