Publish Date: Mon, 29 Oct 2007 (17:05 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (17:04 IST)
நில உரிமை கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்றதால் புதுடெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் சார்பில் அடித்தட்டு மக்களுக்கு நில உரிமை, வாழ்வுரிமை கோரி பிரச்சாரப் பயணம் நடத்தப்பட்டது.
குவாலியரில் தொடங்கிய இந்தப் பயணத்தின் இறுதியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். ஆனால் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள் அம்மக்களைப் பேரணி நடத்தவிடாமல் தடுத்தனர்.
''நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் நாங்கள் ராம்லீலா மைதானத்தில்தான் உள்ளோம்'' என்று பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜகதீஷ் சுக்லா தெரிவித்தார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் இன்று மாலை எங்களைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். எங்களின் கோரிக்கைகள் தொடர்பாகச் சில முடிவுகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் ஜகதீஷ் கூறினார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத்தை இன்று காலை அழைத்துப் பேசினார். அப்போது, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.